பேர்ன், சுவிற்சர்லாந்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, சுவிற்சர்லாந்தின் தலைநகரான பேர்னின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. சோசலிசக் கட்சியைச் சேர்ந்த „திருமதி மரீக்கே குரூயிட்“ நகரின் முதலாவது பெண் முதல்வராக பொறுப்பேற்றதன் மூலம் பேர்ன் நகரம் தனது அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கியமான படியை எடுத்து வைத்தது.
முதல்வராக பொறுப்பேற்ற மரீக்கே குரூயிட்
முன்னாள் முதல்வர் திரு அலெக்ஸ் பொன் கிராப்பென்ரீட், இந்த முறை தேர்தலில் போட்டியிடாமல் விலகினார். அவர் இந்த முடிவை கடந்த தேர்தலில் பெற்ற வாக்குச் சீற்றங்களை முன்வைத்து, முற்போக்கான முறையில் எடுத்ததாக கூறப்படுகிறது. அவரது நீக்கம் பின்னணியாக நகரத்தின் அரசியல் திசையில் புதிய மாற்றம் ஏற்பட்டது. அமைதியான தேர்தல் முறையின் வாயிலாக, திருமதி மரீக்கே குரூயிட், பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்பு அன்று அவர் கூறியதாவது:
“இப்போது நகரத்தலைவராக ஒரு பெண் இருப்பது நேரத்தின் தேவை. எனது பதவியை மகிழ்ச்சியுடனும் மரியாதையுடனும் ஏற்கிறேன். பேர்ன் நகரத்தை உரையாடலின் மூலம் முன்னேற்றுவோம் என்ற நம்பிக்கையுடன் இந்த பொறுப்பை ஏற்கிறேன்.”
திருமதி மரீக்கே நெதர்லாந்தில் பிறந்து சுவிஸ் நாட்டில் குடியேறிய ஒரு வெளிநாட்டவர் குடும்பத்தில் வளர்ந்தவர். தூர்பாக் என்ற கிராமத்தில் வளர்ந்த மரீக்கே 12வது வயதில் சுவிஸ் குடியுரிமை பெற்றார். வணிகத் துறையில் தொழிற்கல்வி முடித்த பின்னர் உளவியலாளராக பயிற்சி பெற்றார். உள்நலத் துறையில் பல பொறுப்புகளை வகித்த இவர் 2012ஆம் ஆண்டு நகர சபையில் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வாகத் துறையில் மக்களின் நம்பிக்கையை வென்ற முக்கிய தலைவர் ஆனார்.
திருக்கோவில் வருகை – தமிழர் சமூகத்துக்கு பெருமை
2025 மே 26, திங்கட்கிழமை, அவர் முதல்வராக பொறுப்பேற்று அரை ஆண்டை நிறைவு செய்யும் வேளையில் திருமதி மரீக்கே குரூயிட் பேர்னில் அமைந்துள்ள அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலுக்கு வருகைதந்தது முக்கிய நிகழ்வாகும். இவரது வருகை தமிழர் சமூகத்தின் பண்பாட்டு மதிப்புகள், சமய வழிபாடு, சமூகநல உணர்வுகள் ஆகியவற்றின் அங்கீகாரமாகவும், சுவிஸ் அரசியல் மற்றும் சமூக அமைப்புகளில் தமிழர்களின் இடத்தை உறுதிப்படுத்தும் தன்மையாகவும் பார்க்கப்படுகிறது.
கோவிலில் சிறப்பு வரவேற்பு
திருக்கோவில் நுழைவாயிலில், சைவநெறிக்கூடம் சார்பில்:
• திரு சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார்
• செயற்பாட்டாளர் செல்வி இலக்ஸ்மணன் லாவண்யா
• பிரெஞ்சுப் பயிற்சிப்பட்டறை பொறுப்பாளர் செல்வி திருச்செல்வம் சாகித்தியா
முதல்வருக்கு பாரம்பரிய தமிழர் வரவேற்பு முறையில் சிறப்பு திருக்குட மரியாதை அளித்தனர். அவருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு, பூமாலை சூட்டப்பட்டது.
பல்சமய இல்ல நிர்வாகிகள் பங்கேற்பு
இந்த நிகழ்வில், பல்சமய இல்லத்தின் நிர்வாகச் சபை உறுப்பினர்கள் மற்றும் இயக்குநர்களும் கலந்து கொண்டனர். அவர்களில்:
• நிர்வாக சபைத் தலைவர் திரு யோஹன்னெஸ் மாத்யாஸ்
• துணைத் தலைவர் திருமதி காபி க்னொக்-முண்ட்
• உறுப்பினர்கள் திருமதி நிக்கோலா வொன் க்ரெயெர்ஸ்,
• திருமதி ஆன் மன்னென்
• இணை நிர்வாக இயக்குநர்கள் திருமதி கறின் மிக்கிட்யுக் திருமதி லூயிஸ் கிராஃப்
• புதிய நிர்வாக இயக்குநர் திருமதி லைலா ஷெய்க்
பங்கேற்றனர். இது தமிழர்கோவில்கள் சுவிஸ் சமூகத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட மதநம்பிக்கைகள், பண்பாட்டு பங்களிப்புகள் மற்றும் சமூக உறவுகளை வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துள்ளது.
தமிழ்ச் சமூகத்தின் உரை
திரு சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார், புதிய முதல்வரிடம் உரையாற்றியபோது, சுவிஸில் வாழும் தமிழர்களின் வாழ்வியல், சமூக தேவைகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். சைவநெறிக்கூடம் முன்னெடுக்கும் சீர்த்திருத்த அன்புவழி மீளெழுச்சி சைவம் நகர முதல்வருக்கு விளக்கப்பட்டது. கருவறையில் தமிழ் வழிபாடு, சாதிமறுப்பு, பெண்களும் செந்தமிழ் அருட்சுனையர்கள் ஆகலாம் எனும் சைவநெறிக்கூடத்தின் கொள்கை நகர முதல்வருக்கு விளக்கப்பட்டது.
“தமிழர்கள் சுவிஸ் நாட்டில் குடிமக்களாக அனைத்து உரிமைகளையும், கடமைகளையும் முழுமையாக பின்பற்றிக் கொண்டு வாழ்கின்றனர். எமது சமூக பண்பாட்டு, மொழி மற்றும் சமய விழுமியங்களை மாநகராட்சி, மாநிலம் ஆகியவை வெளிப்படை உள்ளத்துடன் மதித்து வரவேற்கின்றன,” எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழர்கள் சுவிற்சர்லாந்தில் பல்லினப் பல்பண்பாட்டுக்குள் இசைவுடன் வாழ்வது கடினமல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார். உரையாடல், புரிதல், மதிப்பு ஆகியவை சமூக நல்லிணக்கத்திற்கு அடித்தளமாக அமைய வேண்டும் என்றார். உரையாடல் ஊடாக முரண்களுக்கு தீர்வு எட்டுவதற்கும் நிபந்தனை அற்ற மதிப்பு – புரிந்துணர்வு தேவையாகும். இத்தேவை எமது தாயத்து தமிழர்களுக்கு இப்போதும் உள்ளது என எடுத்து விளக்கினார்.
ஞானலிங்கேச்சுரர் திருக்கோவிலின் முக்கியத்துவம்
சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் கடந்த காலத்திலும், இன்று போலவே, முன்னாள் நகர முதல்வரும், தைப்பொங்கல் மற்றும் தேர்த்திருவிழாக்களில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார். திருமதி. மரீக்கே குரூயிட் தனது நகரமுதல்வர் பொறுப்பின் தொடக்க காலத்திலேயே பேர்ன் நகரத்தில் வாழும் தமிழர்களை நேரில் சந்தித்து, அவர்களின் சமூக மற்றும் பண்பாட்டுப் பங்களிப்பை அங்கீகரித்துள்ளமை, மிகப் பெரிய சிறப்பு. இது பேர்ன் நகரம் பன்முகத்தன்மை மற்றும் நிகரத்துவத்தின் நோக்கில் உறுதியுடன் பயணிக்கின்றதற்கான தொனிச்செயலாகவே தமிழ்மக்கள் நாம் பார்க்கலாம்.
„உங்கள் திருவிழாவிற்கு என்னை அழையுங்கள் – வருவேன்“ எனும் நகரமுதல்வரின் வேண்டுகையுடன் இன்றைய வருகை – வரவேற்பு நிகழ்வு நிறைவுற்றது






















