இன்று (19/03/2021 ) மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்காவில் இடம்பெற இருந்த போராட்டத்திற்கு தடைவிதித்தும் படையினரை குவித்தும் இலங்கை படையினர் இடைஞ்சல் ஏற்படுத்த திடீர் என திட்டம் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு மருங்கையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து சித்தாண்டி சந்திவரை காணாமல் போன உறவுகளாலும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி அமைப்பினாலும் மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டம் இடம்பெற்றது.
அறிக்கை
சர்வதேச நீதி வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நிலைப்பாடு
நாங்கள் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக எமது சுயநிர்ணய உரிமைகளுக்காகப் போராடி வருகின்றோம். தமிழராகிய நாங்கள் இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கு ஒருங்கிணைந்த நிலப்பரப்பைத் தாயகமாகக் கொண்ட ஒரு தேசிய இனம். எங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கும் சகல உரிமையும் எமக்கு உள்ளது. எமது இந்தப் பிறப்புரிமையைத் தொடர்ச்சியாக மறுதலித்து எம்மை அடக்கி ஆள்வதற்கே சிறிலங்கா தேசம் விளைகின்றது. அத்துடன் சிறிலங்கா பேரினவாத அரசு தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது நேரடியாகவும், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இவ்வினவழிப்பின் மிகப்பெரும் வெளிப்பாடாக முள்ளிவாய்க்கால் அழிவுடன் உச்சம் தொட்டது. இந்த அழிப்பின் போது இறுதி ஆறு மாதங்களில் மட்டும் எழுபதினாயிரத்துக்கு (70,000) மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டதை ஐநா செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக்குழுவின் 2012 கார்த்திகை மாத அறிக்கையில் தெரிவித்துள்ளார். கைக்குழந்தைகள், சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். தமிழ் இனத்தின் மீதான படுகொலைகளும், காணாமல் ஆக்கப்பட்படுத்தலும், அவய இழப்புகள், சொத்திழப்புகள் என்பன தொடர்ந்து வந்த நிலையில் இப்போது வடக்கு-கிழக்கை இராணுவ ஆக்கிமிரப்பினூடு சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசார, பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதுடன் வடக்கு-கிழக்கு பூர்வீக குடிகளான தமிழர்களின் இனப்பரம்பலில் மாற்றத்தை உருவாக்கி, தமிழ்த் தேசியத்தைச் சிதைவடையச் செய்து, அவர்களது இருப்பை இல்லாமல் செய்வதற்காக பல வகையிலும் கட்டமைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் அடிப்படையில் தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், நிலவள திணைக்களம், பௌத்த சாசன அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை சிறிலங்கா அரசாங்கமானது முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருகிறது.
சர்வதேச நீதி வேண்டி தொடர்ச்சியாக போராடிவரும் எமது இனம், நடைபெறுக்கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி, பாதிக்கப்பட்ட எமதினத்தின் கோரிக்கைகளான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) சிறிலங்காவை பாரப்படுத்படுத்தல் உட்பட நான்கு கோரிக்கைகளை முன்வைத்து 15/01/2021 கூட்டான கடிதம் ஒன்று சர்வதேசத்தின் கவனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சர்வதேச நீதிக்கும், எமது இருப்புக்குமான கோரிக்கைகைகளை முன்வைத்து நடாத்தப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி (P2P) வரை மக்கள் பேரெழுச்சியின் ஊடாக முழு உலகத்திற்கும் இக்கோரிக்கைகள் உறுதிப்படுத்தப்பட்டது. ஆயின் எமது பொறுப்புக்கூறலுக்கான கோரிக்கைகளை புறந்தள்ளி, பிரித்தானியா உட்பட்ட மைய அணி (Core Group) நாடுகளினால் முன்மொழியப்பட்ட 46/1 பிரேரணையானது முழு தமிழினத்திக்குமே பெரும் ஏமாற்றத்தினை தந்துள்ளது. சர்வதேம் கூட எம்மை தொடர்ந்து தமது நலனுக்கு மட்டும் பாவிக்கும் துர்பாக்கிய நிலையை ஆழமாக புரிந்து கொண்டு, எமது நீதிக்கும், உரிமைக்கும் தொடர்ச்சியாக தாயகத்திலும் சர்வதேச அரங்கிலும் தமிழினம் ஓரணியாக நின்று போராட வேண்டி உள்ளது.
பிரித்தானியாவின் காலனித்துவதிலிருந்து விடுபட்ட நாள் முதல், தொடர்ச்சியாக எமது உரிமைக்காக போராடிய தமிழ் இனம், இன்று எம் மீதான இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டியும், இனத்தின் இருப்பை தக்க வைப்பதற்காக்கவும் போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுள்ளது. ஆயின் எம் மீதான இனவழிபிற்கான பரிகார நீதியினுடாகவே எமது இனவிடுதலைக்கான வாசல் திறக்கப்படும் என்ற தெளிவான புரிதலுடனேயே எமது போராட்டங்கள் தொடர வேண்டும். தமிழினத்தின் நியாயமான விடுதலை போராட்டத்தினை கொடும்கரம் கொண்டு பாரிய அழிப்பினுடாக நசுக்கிய சிறிலங்கா அரசானது, தற்போது எமது ஜனநாயக முறையிலான போராட்டங்களை கண்டு அச்சம் அடைந்துள்ளது. இதன் வெளிப்பாடாக எமது எமது ஜனநாயக போராட்டங்களை எவ்வாறேனும் முடக்க வேண்டும் என்று தடையுத்தரவுகள், வாக்குமூல சேகரிப்புகள், பதிவுகள் எடுத்தல், புலனாய்வு துறை மாற்றும் போலீஸ் மிரட்டல்கள், மனரீதியான அழுத்தங்கள் மூலம் செயல்பாட்டாளர்களை மிரட்ட தொடங்கியுள்ளது. ஜனநாயக போராட்டங்களை கூட பயங்கரவாதமாக சித்தரிக்க முயல்கின்றது. இந்நிலையை முறியடிக்க, மக்கள் மயப்படுத்தப்பட்ட ரீதியில் அனைத்துத் தமிழ் பேசும் மக்களும் பெரும் திரளாக வீதியில் இறங்கி போரடுவதன் மூலமே எமது ஜனநாயக வெளிப்படுதல் எனும் உரிமையையாவது பாதுகாக்க முடியும்.
எமது போராட்டங்கள் கீழ்வரும் கோரிக்கைகளின் அடிப்படையிலேயே தொடரும்,
- சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) பாரப்படுத்துவதினூடாக, சிறிலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிரான இனவழிப்பு என்பனவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.
- தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் பேசும் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும்.
இக்கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்க அனைவரையும் அணிதிரளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி