சுவிசின் மகுடநுண்ணித் தொடர்பான அறிவிப்பு

0 0
Read Time:10 Minute, 41 Second

மகுடநுண்ணித் தொற்று தடுப்பு நடவடிக்கை தொடர்பான தகவல் அளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பினை கடந்த புதன் 27. 01. 2021 பேர்ன் நகரில் 14.00 மணிக்கு சுவிஸ் அரசு நடாத்தியிருந்தது.

இதில் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே, நிதியமைச்சர் திரு. ஊவெலி மௌறெர், பொருளாதார அமைச்சரும் சுவிஸ் அதிபருமான திரு. குய் பார்மெலின் ஆகியோர் பங்கெடுத்திருந்தனர். சுவிற்சர்லாந்து அரசு முன்னர் அறிவித்திருந்த முடக்கங்கள் பெப்பிரவரி 2021 முழுவதும் நடைமுறையில் இருக்க, புதிதாக கீழ்க்காணும் நடவடிக்கைகளை புதிதாக இணைத்துள்ளது. இதன் சுருக்கம் பின்வருமாறு:
தனிமைப்படுத்தல்
மகுட நுண்ணித்தொற்றுக்கு (கோவிட் 19) ஆளானவருடன் தொடர்புள்ளவர்கள் 10 நாட்களுக்கு தம்மைத் தனிமைப்படுத்த வேண்டும் எனும் விதி இதுவரை உள்ளது. ஆனால் புதிய நடைமுறையில் தொற்றுக்கு ஆளான நபருடன் தொடர்பிலிருந்தவர் தொற்று உறுதிசெய்யப்பட்ட 7வது நாள் நோய்த்தொற்று பரிசோதனை செய்து, தொற்று இல்லை எனும் பெறுபேறு கிடைத்தால் அவர்கள் தம்மைத் தனிமைப்படுத்த தேவையில்லை என்பது சுவிஸ் அரசின் புதிய அறிவிப்பாகும். இதற்கு மாநில அதிகாரிகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். பரிசோதனைச் செலவினை சோதனை செய்பவர் செலுத்த வேண்டும். தனிமைப்படுத்தல் காலம் முடியும்வரை சுகாதாரப்பாதுகாப்பு முகவுறை அணியப்பட வேண்டும், 1.5 மீற்ரர் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும். தனிவீட்டில் அல்லது தனிவிடுதியில் வசிப்பவர்களுக்கு முகவுறை அணிதலில் விலக்கு அளிக்கப்படுகின்றது.
தொற்றுப்பரிசோதனை
28. 01. 2021 முதல் நடுவனரசு காப்பமைவினை விரிவுபடுத்துகின்றது. இதற்கு அமைய பாடசாலைகளில், மூதாளர் இல்லங்களில், விடுதிகளில் அல்லது தொழிலிடங்களில் பெருவாரியான நோய்த்தொற்றுப் பரிசோதனை ஆற்றப்படலாம். இப்பரிசோதனைச் செலவு அனைத்தையும் சுவிஸ் நடுவனரசு ஏற்றுக்கொள்ளும். நோய்த்தொற்று அறிகுறி இல்லாதவர்களுக்கும் பரிசோதனை செய்யப்படும். இந்நடவடிக்கை நோய்த்தொற்று அடங்கைக்கு (அபாயத்திற்கு) ஆளாகக்கூடியவர்களை முற்கூட்டிக் காத்துக்கொள்ள உதவும் எனக் கருதப்படுகின்றது. மேலும் நோய்ப்பரவலை கட்டுப்படுத்தவும் பெருவாரியான சோதனை உதவும் எனவும் கூறப்பட்டது.
இடர்நிலை
நோய்த்தொற்று நடவடிக்கையால் பாதிப்படைந்திருக்கும் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் உதவுதற்கு முன்னர் 2.5 பில்லியன் சுவிஸ் பிராங் ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தொகையை மேலும் 2.5 பில்லியன் பிராங் உயர்த்த நடுவனரசு சுவிஸ் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. இதன்படி இடர்நிலை போக்கும் நிதித்தொகை 5 பில்லியனாக உயர்ந்துள்ளது. புதிய நிதியில் நடுவனரசு 1.675 பில்லியன் பிராங் அளிக்கவும் மிகுதியை மாநில அரசுகள் இட்டு நிரப்பவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தண்டனைப்பணம்
இதுவரை சுவிஸ் அரசு அறிவித்திருக்கும் நடவடிக்கைகளை மீறுபவர்களை தண்டப்பணம் கொண்டு தண்டிக்க சட்டத்தில் வழியிருக்கவில்லை. புதிதாக தனிவகைச் சூழலில் நோய்த்தொற்று தடுப்பு நடடிக்கையினை மீறுபவர்களைத் தண்டிக்க புதிய சட்டம் 01.02.2021 முதல் நடைமுறைக்கு வருகின்றது. இது 50 பிராங் முதல் 200 பிராங்கிற்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. பொதுப்போக்குவரத்து தரிப்பிடங்களில் அல்லது தொடருந்துநிலையத்தில் உரிய சுகாதார முகவுறை அணியாதவர்களுக்கு அதுபோல் தனியார் நிகழ்வுகளை நடாத்துபவர்களுக்கும், அவ்வாறான நிகழ்வுகளில் பங்கெடுப்போருக்கும் தண்டம் அறவிட புதிய சட்டம் இடமளிக்கின்றது.
சுவிஸ் நாட்டிற்குள் நுழைவு
அதிக தொற்றுக்குள் உள்ளான நாட்டிற்குள் இருந்து சுவிஸ் நாட்டிற்குள் உள்நுழைவோர் எதிர்வரும் நாட்களில் மூலக்கூற்று தொடர்வினை (பி.சி.ஆர்) பரிசோதனைச் சாற்றிதழைக் கையளித்து, நாம் மகுடநுண்ணி நோய்த்தொற்றுக்கு ஆளாகவில்லை என்பதை மெய்ப்பிக்க வேண்டும். இப்பரிசோதனை 72 மணிநேரங்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இருந்தபோதும் 10 நாட்கள் தம்மைத் தனிமைப்படுத்தி இருக்க வேண்டும். 7வது நாள் நோய்த்தொற்றுப் பரிசோதனை செய்துகொண்டு தனிமைப்படுத்திலில் இருந்து விடுவித்துக்கொள்ளலாம். தொற்றளவு அதிகம் உள்ள நாடுகளை சுவிஸ் நிரல்படுத்தி உள்ளது. இந் நிரலில் உள்ள நாடுகளில் இருந்து சுவிஸ் நோக்கி வருவோர் விமானம் ஏறுவதற்கு முன்னர் நோய்த்தொற்றுப்பரிசோதனைச் சான்றினை அளிக்க வேண்டும்.
தொடர்புத் தகவல்கள்
விமானம், கப்பல் அல்லது தொடருந்து ஊடாக சுவிற்சர்லாந்திற்குள் நுழைவோர் தமது சுயவிபரத்தகவல்களை அளிக்க வேண்டும். இத் தரவுகள் மின்னியல் வடிவில் உள்நுழைவுப்படிவத்தில் பதியப்படும். இதனூடாக நோய்த்தொற்று தொடர் சங்கிலியை அறிதல் இலகுபடுத்தப்படுகின்றது. அதுபோல் நோய்த் தொற்றினை முற்கூட்டியே கண்டறிந்து துண்டிக்க இத்தரவு முறை உதவும். 08. 01. 2021 முதல் இவ்விதிகள் நடைமுறைக்கு வருகின்றது.
தடுப்பூசி
மருந்தகங்களில் தடுப்பூசியை இட்டுக்கொள்ளும் முறை நடைமுறைக்கு வரவுள்ளது. இதன் முழுச் செலவினையும் சுவிற்சர்லாந்து நடுவனரசு முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.
மூச்சுப்பாதுகாப்பு முகவுறை
மாநில மற்றும் நடுவனரசின் கையிருப்பில் உள்ள அனைத்து சுகாதார மூச்சுப்பாதுகாப்பு முகவுறைகளையும் அதன் காப்புத் திறன் தொடர்பாக நடுவனரசு ஆய்வு செய்ய முடிவுசெய்துள்ளது. இதற்கமைய மகுடநுண்ணி விதி (கோவிட் 19) சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படி திறனற்ற அல்லது குறைகொண்ட முகவுறைகள் இருப்பிலிருந்து களையப்படும்.
பண்பாட்டு படைப்பாளிகள்
பண்பாட்டு படைப்பாளிகள் வருமான இழப்பிற்கு ஈடு கேட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் காலத்தினை பின்னோக்கி 01. 11. 2020 முதல் நடுவனரசு நிர்ணயித்துள்ளது. மாநில அரசுகளிடம் இவர்கள் தம் இழப்பீட்டு விண்ணப்பத்தினை தாக்கல் செய்யலாம். இழப்பீடு பெறுவதற்கான அனைத்து தகமையினையும் கொண்டவர்களுக்கு 01. 11. 2020 முதல் காலம் கணக்கிட்டு இழப்பீடு வழங்கப்படும்.
தொழிலிழந்தவர்கள் காப்பீடு
சுவிற்சர்லாந்தின் நடுவனரசு நிதியமைச்சை தொழில் இழந்தோருக்கான காப்பீட்டு காலத்தினை மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க கோரிக்கை விடுத்துள்ளது. மகுடநுண்ணித் தொற்றுக் காலத்தின் சூழலைக் கருத்திற்கொண்டு, தற்போது தொழில் இழந்திருப்பவர்களுக்கு சட்டப்படி இழப்பீடு பெறும் காலத்தைவிட மேலும் 3 மாதங்கள் இழப்பீடு வழங்க இச்சட்டம் வழிசெய்கின்றது.
குறுகியகாலப்பணி இழப்பீடு
இதுதவிர மகுடநுண்ணித் தொற்று தொடங்கிய காலம் முதல் தொழில் நிறுவனங்கள் முழுமையான பணியினை தமது பணியாளர்களுக்கு வழங்க முடியாத சூழலில், பணி நேரம் குறுக்கப்பட்டிருந்தால் அல்லது தொழிலற்ற சூழலில் தொடர்ந்தும் நிறுவனத்திடம் வேலை ஒப்பந்தத்தினை காத்துக்கொண்டு பணியாளர்களுக்கான ஊதியத்தினை வேலையிழந்தோர் காப்பீடு ஊடாக சுவிஸ் நடுவனரசு இழப்பீட்டினை வழங்கி வருகின்றது. இது 2021லும் தொடரப்படும். இதற்கான முழுச்செலிவனையும் அண்ணளவாக 6 பில்லியன் சுவிஸ்பிராங்குகளை நடுவனரசு முழுமையாக பொறுப்பேற்கின்றது.
தொகுப்பு: சிவமகிழி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment