இவ்வாண்டு மே 18 தமிழினப்படுகொலையின் பன்னிரண்டாவது ஆண்டு நிறைவின் நினைவு நாளாகும். தமிழ் மக்களை கொடூரமாக அழித்ததோடல்லாமல் எமது நினைவுரிமையையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவுகூரலை நாங்கள் எதிர் கொள்கின்றோம். எமது பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு எமது மாணவரின் போராட்டத்தின் காரணமாக அதனை மீளக்கட்டியமைக்க வழிவிட்டது. இப்போது வருடாவருடம் எமது மக்கள் பொங்கும் உணர்வுகளோடு வந்து அழுது ஆறிச்செல்லும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சுடர் தூபியை மிலேச்சத்தனமாக அழித்ததோடு நினைவுக்கல்லையும் வஞ்சகமாக கவர்ந்து சென்று அராஜகம் புரிந்துள்ளது.
மேலும் கொரோனாவைக் காரணங்காட்டி முல்லைத்தீவு பகுதியை முடக்கி நாம் எந்த விதத்திலும் முள்ளிவாய்க்காலை அணுகமுடியாதபடி தடுத்துள்ளது. இவர்களது இழிசெயலுக்கு வரலாறு பதில் சொல்லும்.
ஆகவே மக்களே!
இவ்வாண்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் மூடப்பட்டது என்றால் நாங்கள் எமது வீட்டு முற்றங்களை நினைவு முற்றங்களாக்குவோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளபடி
• மாலை 6.00 மணிக்கு ஆலயங்களில் மணியொலி எழுப்புவோம்.
• எமது வீட்டு முற்றங்களில் நினைவுச் சுடர் ஏற்றுவோம்
• இல்லங்களில் ஒரு வேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து உண்போம்
• அந்த வேளையில் எமது எதிர்கால சந்ததியினருக்கு இனப்படுகொலையின் உண்மையை எடுத்து விளக்குவோம்
நினைவிடத்தை அழிக்கலாம் நினைவுகளை அழிக்க முடியாது என்பதை உரத்துச் சொல்லுவோம்.