19.03.21 சுவிஸ் அரசின்  அறிவிப்பு

0 0
Read Time:16 Minute, 37 Second
  1. 2021 முதல் தனிநபர்கள் சந்திப்பு மற்றும் விழாக்களில் ஆகக்கூடியது 10 ஆட்கள் ஒன்றுகூடலாம். இதுவரை 5வர் மட்டுமே ஒன்றுகூட அனுமதிக்கப்பட்டிருந்தது.

கடந்த நாட்களில் நோய்த்தொற்றுத் தொகை அதிகரித்து உள்ளதால் சுவிஸ் அரசு மேலும் 22. 03. 21 முதல் அறிவிக்க இருந்த ஏனைய தளர்வுகளை இடைநிறுத்தி வைக்கின்றது.

சுவிற்சர்லாந்தில் பேர்ன்நகரில் 19.03.21 வெள்ளிக்கிழமை 15.00 மணிமுதல் சுவிஸ் அரசின் மகுடநுண்ணித் தொற்றுத் தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், நடைமுறையில் இல்ல சமூக முடக்கத்தினை தளரத்துவது தொடர்பிலும் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது. சுவிஸ் நடுவனரிசின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே மற்றும் சுகாதர திணைக்கள அதிகாரி திரு. பத்திறிக் மத்தீஸ் அவர்களும் இணைந்து அரசின் சார்பிபல் அறிவிப்பினை வெளியிட்டனர்.

பொறுமை வேண்டும்

வருத்தத்திற்கு உரியது, நாம் நினைத்ததுபோல் தளர்வுகளை விரைந்து அறிவிக்க முடியாதுள்ளது. நாம் மேலும் பொறுமைகாக்க வேண்டும் என்றார் சுகாதார அமைச்சர். தற்போது நாம் தளர்வுகளை அறிவிக்ககூடிய பாதுகாப்பான சூழல் நிலவவில்லை. தற்போதைய மகுடநுண்ணித் (கோவிட்-19) தொற்றுச் சூழல் பாதுகாப்பு நிலையற்றதாகவே உள்ளது. 10 ஆட்கள் வரை தனிப்பட்டு நேரில் கூட அனுமதிப்பதுகூட தனிமனித உரிமையினை பேணுவதற்காக அறிவிக்கப்படும் தளர்வு நடவடிக்கை ஆகும் என்றார் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே.

அடுத்த தளர்வுகள் இப்போதில்லை

நாம் முடக்கத்தில் இருந்து விரைந்து வெளிவர முனைகின்றோம். சுவிஸ் அரசு மகுடநுண்ணியை சுழியம் (0) வரை ஆக்குவதற்கும் முனையவில்லை, அதுபோல் நுண்ணித் தொற்று இல்லை என்ற உள்ளப்போக்கிலும் இயங்கவில்லை. பொருளாதாரமும் சுகாதார நலவாழ்வும் பாதிக்கப்படாத மூலோபாய வழியில் சுவிஸ் அரசு இதுவரை பயணித்து வருகின்றது. ஆகவே சுவிஸ் நடுவனரசு நடு வழியைத் தெரிவுசெய்து தனது அடிகளை எடுத்து வைக்கின்றது.

நாம் சின்ன அடிகளை எடுத்து வைத்தாலும் நிலையான அடிகளை எடுத்து முன்னோக்கி நகர விரும்புகின்றோம். எமது பல அண்டைய நாடுகளிலுல் விரைந்து தளர்வுகள் அறிக்கப்பட்டு அதே வேகத்தில் மீண்டும் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை சுவிஸ் தவிர்க்க விரும்புகின்றது.

நாங்கள் தடுப்பூசி இடுவதில் முன்னேற்றம் கண்டுவருகின்றோம். நோய்த்தொற்று அறிகுறிகளுடன் தடுப்பூசியை இடமுடியாது. அதனால் நாம் திட்டமிட்ட சில தளர்வுளை 22.03.21 அறிவிக்காது தவிர்க்கின்றோம். பெரிய வெள்ளி காலம் (ஈஸ்ரர்) கடந்த நாத்தார் காலத்தில் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் நிலவியதுபோன்ற பெருந்தொற்றுக்காலமாக மாறக்கூடாது என்பதில் சுவிஸ் அக்கறை கொண்டுள்ளது. ஆகவே எதிர்வரும் பண்டிகை நாட்கள் தொற்றினை அதிகரிக்காது பாதுகாக்க விரும்புகின்றோம்.

இம்மாத இறுதியில் அடுத்த அறிவிப்பு

புதிய தளர்வு நடவடிக்கையினை சுவிஸ் அரசு அறிவிக்காதபோதும் கடைகள் தற்போதைய முறையில் திறந்திருக்கும். இம் மாத நிறைவில் சுவிஸ் அரசு ஒன்றுகூடி அடுத்த தமது நடவடிக்கையினை ஆய்வு செய்தும். நோய்தொற்று கட்டுக்குள் இருப்பின் புதிய தளர்வுகளும், தொற்றுச்சூழல் பாதிப்பாக இருந்தால் புதிய நடவடிக்கையும் அறிவிக்கப்படும் என்றார் சுவிசின் சுகாதார அமைச்சர்.

நோய்த்தொற்றுப் பரிசோதனை

சுவிஸ் அரசு கடந்த முறை அறிவிப்பில் அனைவரும் அதிக பரிசோதனை செய்ய வழி அமைத்துள்ளதாக அறிந்தோம். ஆனால் அதில் முன்னேற்றம் காணவில்லை என அறிகிறோம் இப்போது எப்படி சூழல் உள்ளது என ஊடகவியலாளர் வினா விடுத்தார்:

இதற்குப் பதில் அளித்த சுவிசின் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே, இதுவரை நடமாடும் பரிசோதனை நிலையங்களில் 40வீதமான சுவிஸ்வாழ் பொதுமக்கள் பரிசோதனைகளை செய்துள்ளார்கள். இதன் தொடர்ச்சி சரியாக உள்ளது என்றார். சுகாதாரத் திணைக்கள அதிகாரி திரு. பத்திரிக் மத்தீஸ் தெரிவிக்கையில் வீடுகளில் இருந்தபடி இலகுவான வழியில் பரிசோதனை செய்யும் முறமையும் எதிர்வரும் காலத்தில் நடைமுறைக்கு வரும். அது இவ்வகை கடினத்தைப் போக்கும் என்றார்.

கட்டுப்பாட்டை இழக்கக்கூடாது

கடந்த 24 மணிநேரத்தில் 72 நோயாளர்கள் மட்டுமே மருத்துவமனையில் மகுடநுண்ணித் தொற்றின் காரணத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது பெரும் பேரிடர் அல்ல, இருந்தபோதும் சமூக முடக்கம் ஏன் தொடர்கின்றது என்ற கேள்விக்கு சுகாதார அமைச்சரின் பதில்:

தற்போது உள்ளது முழுமுடக்கம் அல்ல. நாம் இங்கு முடக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தலாகாது. ஏனைய சுவிசின் அண்டைய நாடுகளுடன் ஒப்பிடுகiயில் சுவிசில் பல தளர்வுகளைக் காணலாம். நோய்த்தொற்றுக்கு ஆளாவோர் தொகை அதிகரித்துக்கொண்டுபோனாலும் நாம் பெருந்தொற்றை தற்போது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கின்றோம். எமது நடவடிக்கைகள் தொற்றினை கட்டுப்படுத்துகின்றன. கடந்தகாலங்களில் மார்ச், ஏப்பிரல் அதுபோல் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத்தில் நோய்தொhற்றுச்சூழலின் கட்டுப்பாட்டை இழந்திருந்தோம்.  இவ்வாறான சூழலை தவிர்க்கவே தற்போது மெதுவாக அடிகளை எடுத்து வைக்கின்றோம்.

தற்போது பெரும் இடர்காலம் இல்லாதபோதும் தொற்றின் தொகை 3கிழமையில் இரட்டிப்பாகக்கூடிய ஆபத்து உண்டு. தற்போது அனைவரும் தடுப்பூசி இட்டுக்கொள்ளவில்லை. ஆகவே பெரும் தளர்வுகளை இப்போது அறிவிக்க முடியாது என்றார் சுகாதார அமைச்சர்.

கதவடைப்புத் தவிர்ப்பு

சுவிஸ் அரசு தற்போது மேற்கொண்டுள்ள நோய்த்தடுப்பு மூலோபாயம் முழு முடக்கத்தையும் முழுமையான கதவடைப்பினையும் தவிர்ப்பதாகும்.

நாங்கள் இப்போது முதற்கட்டமாக நுண்ணித்தொற்றால் பெரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகக்கூடியவர்களை இனம் கண்டு தடுப்பூசி இடுகின்றோம்.

அடுத்த கட்டத்தில் தடுப்பூசி இட்டுக்கொள்ள இணக்கமுள்ளவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி இடுவோம்.

மூன்றாம் கட்டத்தில் தடுப்பூசி இட்டுக்கொண்டவர்களுக்கெல்லாம் நோய் எதிர்ப்பு சக்தி வாய்க்கப்பெறுவர்.

பெரும்பாலான மக்கள் நோய் எதிர்ப்பு சக்தி வாய்க்கப் பெற்ற பின்னர்தான் நாம் முழுத் தளர்வுகளை அறிவிக்கலாம் என்றார் சுவிஸ் சுகாதாரத் திணைக்கள அதிகாரி திரு. பத்திறிக் மத்தீஸ்.

மருத்துவமனைகள்

கடந்த நாட்களில் சுவிசின் மருத்துவமனைகளில் தீவிர வைத்தியப் பிரிவில் நெருக்கடி குறைவாக உள்ளது. மாநில அரசினதும் நடுவனரசினதும் நடவடிக்கையின் பெறுபேறு இதுவாகும். கடந்த பெப்பிரவரி முதல் மருத்துவமனையின் பணி அழுத்தத்தைக் குறைக்க மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகள் பலன் அளித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

ஆனாலும் இதனைச் சாட்டாக வைத்து மேலதிக தளர்வுகளை அறிவிக்க முடியாது. ஏனெனில் இப்போது நிலவும் சூழல் தொற்று அதிகரித்தால் உடன் மாறலாம் என்றார் திரு. அலான் பெர்சே.

மேலதிக தளர்வுகள்

மேலதி தளர்வுகளை சுவிஸ் அரசு அறிவிக்குமா எனா வினாவப்பட்டது, இல்லை என்று பதில் அளித்தார் சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே. நாம் அடுத்த அலையை எதிர்கொள்ள தயாராகி வருகின்றோம். தொற்றின் தொகையே எமது அடுத்த நடவடிக்கையினை தேர்வுசெய்யும் என்றார் சுகாதார அமைச்சர்.

வீடுகளில் 10 ஆட்கள்

வீடுகளில் 10 ஆட்கள் நேரில் கூட அனுமதி வழங்கும் சுவிஸ் அரசு உணவங்களின் வெளியிடத்தில் கூடுவதற்கு ஏன் தடையினைத் தொடர்கின்றது என்ற கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு திரு. பெர்சே இவ்வாறு பதிலளித்தார்:

5வர் மட்டும் ஒன்றுகூடலாம் எனும் அறிவிப்பு தனிமனித வாழ்வில் உரிமை மீறலாகவும் அமைந்திருந்தது. கடந்த ஓர் ஆண்டில் சரியான முடிவு எது எதன்பது தொடர்பில் நாமும் உசாவி வருகின்றோம். உரிய பதில் காண்பது இலகுவல்ல. பொது இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டி உள்ளது. மேலும் உணவங்களுக்கு தொடர்ந்து பொருள் இழப்பீடு வழங்கப்படுகின்றது என்றார் சுகாதார அமைச்சர்.

புதிய உருமாறிய நுண்ணிகள் உயிர்க்கொல்லிகளா?

உருவம் மாறி உலாவரும் நுண்ணிகளின் தொற்றுத்தீவிரம் ஏனையவற்றைவிட அதிகம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் புதிய உருமாறிய மகுடநுண்ணி இறப்பு விகிதத்திலும் 50வீதம் அதிகமாக உள்ளதாக கடந்த கால ஆய்வறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன என்றார் சுகாதார அமைச்சர். சுகாதாரத் திணைக்கள அதிகாரி திரு. பத்திறிக் மத்தீஸ் தெரவிக்கையில் இவ்வாய்வுகள் அனைத்தும் இங்கிலாந்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்டவை இருந்தபோதும் இது சுவிசிற்கும் பொருந்தலாம் என்றார்.

மே 2021 வரை நிகழ்வுகள் இல்லை

தற்போதைய சூழலில் மேமாதம் வரை பொதுப் பெரும் நிகழ்வுகள் நடாத்தப்படமுடியாது. கோடைகாலத்தில் இச்சூழல் எப்படி இருக்கும் என்று இன்று அறிவிக்க முடியாது. இப்போது நாம் கண்ணியத்துடன் நடந்துகொண்டால் கோடைகாலம் சிறப்பாக இருக்கும் என்று தாம் நம்புவதாக சுகாதார அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

வெளியில் உணவங்களுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை?

முதல் இருந்த சூழலை விட தற்போது தொற்றுநிலை மாறியுள்ளது. தொற்று அதிகரித்துள்ளது. மாநிலங்கள் உணவங்களை திறக்க அனுமதி கோரியபோதும் முதல் அலைகாலத்தில் நிலவிய சூழலே தற்போதும் நிலவுவதாக நடுவனரசு கருதுகின்றது. தற்போது விருந்தோம்பல் துறைக்கு உரிய பொருள் இழப்பீட்டை அரசு வழங்கி வருகின்றது. ஒருபகுதி உணவகத்தை திறந்து வெளித்திடலில் மட்டும் நடைபெறும் விற்பனை உணவகத்தின் மொத்தச் செலவீனத்தை ஈடுசெய்து இலாபம் அளிக்காது. ஆகவே இவ்விரண்டு சூழலையும் கருத்திற்கொண்டு நாம் இம் முடிவினை எட்டினோம்.

தனியார் விழாச் செய்வோர், ஒன்றுகூட முன்னர் கட்டாயம் நோய்த்தொற்றுப் பரிசோதனையைச் செய்ய

வேண்டுகை விடுக்கின்றோம் என்றார் சுகாதார அமைச்சர்.

சுவிஸ் அதிபர் திரு. பர்மெலின் எங்கே?

கடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுவிஸ் அதிபரும், நடுவனரசின் பொருளாதார அமைச்சருமான திரு. பார்மெலின் அவர்கள், சுகாதாரத்துறை அமைச்சருடன் பங்கெடுத்திருந்தார். இம்முறை ஏன் அவர் வரவில்லை என்ற கேள்வியை ஊடவியலாளர் ஒருவர் விடுத்தார்.

இதற்கு சுகாதார அமைச்சர் திரு. அலான் பெர்சே இவ்வாறு பதிலளித்தார்:

இவ்வறிவித்தல் சுவிசின் பொது அறிவித்தல் ஆகும். திரு. பர்மெலின் உடனிருக்கவில்லை என்பதன் பொருள் அவருக்கும் எமக்கும் முரண்பாடு என்பதல்ல. அரசியலில் நாம் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டு வாதாடுவோம். இது நலமான மக்களாட்சிக்கு தேவையானதாகும். ஆனால் இன்றைய இச்சந்திப்பில் அவர் பங்கெடுக்க வேண்டிய தேவையிருக்கவில்லை. மேலும் 7 அமைச்சர்களும் இணைந்ததே நடுவனரசு ஆகும். இம்முடிவுகள் அரசின் முடிவாகும் என்றார் சுகாதார அமைச்சர்.

குறுநேரப்பணி (Kurzarbeit)

உணவகங்கள் முதல் சில நிறுவனங்களின் பணியாளர்கள் தற்போது வீடுகளில் இருந்தபடி 80வீத ஊதிய இழப்பீட்டினைப் பெற்றுவருகின்றனர். மார்ச் 2021 வரை இவ் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இப்போது சுவிஸ் நடுவனரசு இத் திட்டத்தினை யூனி 2021 வரை நீடித்துள்ளது. உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் இலகுபடுத்தப்பட்ட முறையில் இழப்பீட்டு விண்ணபத்தை தாக்கல் செய்யலாம்.  

இம்மாதத்தின் இறுதியில் அடுத்த அறிவிப்பு வரும், அதுவரை பொறுத்திருப்போமாக!

தொகுப்பு: சிவமகிழி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment