மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் சர்வதேசத்திடம் நீதிகோரிஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கும் கைதுசெய்வதற்கும் பொலிஸார் மேற்கொண்ட முயற்சி காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வருகைதந்த பெருமளவு பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்துசெல்லுமாறும் இல்லாவிட்டால் கைதுசெய்யப்படுவீர்கள் எனவும் மிரட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் 50க்கும் மேற்பட்ட பொலிஸாரும் போக்குவரத்து பொலிஸார் என பல தரப்பினர் பஸ் வண்டிகளுடன்சென்று இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற தடையுத்தரவு கட்டளை உள்ளதன் காரணமாக குறித்த பகுதியில் போராடமுடியாது எனவும் கொரனா நடைமுறைகளை மீறிய வகையில் போராட்டம் நடைபெறுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறித்த பகுதியில் போராட்டம் நடாத்தமுடியாது எனவும் அதற்கான நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாகவும் மீறி போராட்டம் நடாத்தினால் கைதுசெய்யப்படுவீர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாங்கள் அமைதியான முறையில் போராடும்போது பொலிஸார் ஜனநாயகத்தினை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் இதுதான் இன்றைய இலங்கையின் நிலமையெனவும் இதனை சர்வதேச சமூகம் சிந்தித்து தமிழ் மக்களுக்கான நீதியை வழங்கவேண்டும் எனவும் அங்கு கூடியிருந்த போராட்டக்காரர்களால் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக பொலிஸார் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
நீதிமன்ற தடையுத்தரவு போராட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனபோதிலும் தங்களிடம் எந்த தடையுத்தரவும் காண்பிக்கப்படவில்லையெனவும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேநேரம் இன்று மாலை அமைதியான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு பொலிஸார் ஏற்படுத்திவரும் இடையூறுகளுக்கு எதிராக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமக்கான நீதியைக்கோரி அமைதியான முறையிலும் சாத்வீகமான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்துவருவோர் மீது அடாவடித்தனங்களையும் போலியான குற்றச்சாட்டுகளையும் பொலிஸார் முன்வைப்பதுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்படுவதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.