தமிழின இனவழிப்புக்கு நீதி கோரி லண்டனில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துங்கள் என்று வலியுறுத்தி யாழ்ப்பாணம் நல்லூர் ஆதீனம் முன்றலில் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார மாணவர் ஒன்றியம் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன்று எமது இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புக்கு நீதி வேண்டி மாணவர்களாகிய நாம் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ளோம். எமது இனத்தின் மீதான இனவழிப்பும் ஒடுக்குமுறையும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக எம்மீது திணிக்கப்பட்ட யுத்தத்தினால் தொடர்ச்சியான உயிரிழப்புகள், அவய இழப்புகள், சொத்திழப்புகளுடன் பெருந்தொகையாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது சொந்தங்களை நித்தமும் தேடிக்கொண்டிருக்கும் ஓர் மக்கள் கூட்டமாகவே நாம் உள்ளோம். இதுவரை காலமும் எமது மக்களுக்கான நீதி வழங்கப்படாமலேயே உள்ளது. உரிமைக்காக போராட ஆரம்பித்த நாம் இன்று எமக்கான நீதி வேண்டி போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
உள்நாட்டு பொறிமுறையில் தமிழருக்கான நீதி எப்போதும் கிடைக்காது என்ற பட்டறிவில்தான் நாங்கள் தொடர்ச்சியாக சர்வதேசத்திடம் எமது நீதியை வேண்டி நிற்கின்றோம். இதன் வெளிப்பாடாகவே, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு முன்னர் 2021ம் ஆண்டு தை மாதம் 15ம் திகதியன்று தமிழர்கள் ஒன்றிணைந்து ஓர் கடிதத்தை அனுப்பியிருந்தோம். இதன் தொடர்ச்சியாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் தற்போதைய உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை மாதம் 27ம் திகதியிடப்பட்ட தனது அறிக்கையில்,இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் வலியுறுத்தியுள்ளார். அதனைத்தொடர்ந்து அண்மையில் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்களினால் ஒழுங்குசெய்யப்பட்டு இலட்சக் கணக்கான தமிழ் பேசும் மக்கள் பங்குபற்றிய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) பேரணியின் மூலமாக இக்கோரிக்கை மேலம் வலுச்சேர்க்கப்பட்டிருந்தது. அத்துடன் ஐ.நா. மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர் ஆணையாளர்கள், ஒன்பது சுயாதீன ஐ.நா. நிபுணர்கள் இலங்கை சம்பந்தமான ஐ.நா. செயலாளர் நாயகத்தின் வல்லுநர்கள் குழுவின் உறுப்பினர்களும் அடங்கலாக இருபது முன்னாள் ஐ.நா. அதிகாரிகள் “ யுத்த விதைகளை விதைத்தல்” எனத் தலைப்பிடப்பட்டு 2021ம் ஆண்டு மாசி மாதம் 18திகதி வழங்கிய தமது அறிக்கையில் இலங்கையானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்தப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். இதன் வெளிப்பாடாக எமது மக்களுக்கான நீதி கிடைக்கும் என எதிர்பார்ப்புடன் இருந்தோம்.
ஆனால் மனித உரிமைகள் சபையின் 2021ம் ஆண்டு மாசி மாதம் 19ம் திகதியிடப்பட்ட இலங்கை மீதான பூச்சிய வரைவுத் தீர்மானமானது தமிழ்ச் சமூகத்தினுடைய அடிப்படை எதிர்பார்ப்புக்களையேனும் விசேடமாக தமிழர்களைக் கொத்துக் கொத்தாக கொன்றமை, தமிழ்ப் பெண்களை வன்பணர்ந்தமை மற்றும் பெருந்தொகையானோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை அடங்கலான சிறிலங்கா படையினரால் புரியப்பட்ட கொடுரமான பூர்த்திசெய்யவில்லை.
ஆகவே இப்போராட்டத்தின் கோரிக்கைகளாக,
- சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (ICC) பாரப்படுத்துவதினூடாக, சிறிலங்கா அரசாங்கத்தினால் புரியப்பட்டுள்ள போர்க் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் தமிழ் இனத்திற்கு எதிரான இனவழிப்பு என்பனவற்றிக்கு சர்வதேச நீதி வேண்டும்.
- தமிழ் இனத்தின் மீதான இனவழிப்பு தொடராது இருப்பதற்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளான மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்பன அங்கீகரிக்கப்படவேண்டும்.
இக்கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இத்தொடர்ச்சியான சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்கு அனைவரும் ஆதரவளித்து, திரண்டு வந்து வலுச்சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
என்றுள்ளது