கடற்கரும்புலி லெப்.கேணல்.நளாயினி
“சாகரவர்த்தனாவுக்கு” சங்கூதிய
சாதனைப் பெண்ணே
சாவுக்குத்துணிந்து சரித்திரமான
சத்தியப் போர்மகளே.
தயக்கம் உன்னிடம் இருந்ததில்லை
நடிப்புகள் போலித்தனங்களுக்கு
உன் செயல்களில் இடமில்லை
நிதானமான எண்ணங்களை
நேரிடையாக வெளிப்படுத்தும்
திமிர்க்காரி நீயக்கா
பயத்துக்கு நீ பரீட்சை வைப்பவள்
புரட்சிச் சிந்தனையிற் சுழல்பவள்
பருத்த உன் உருவத்தினுள்ளே
பெருத்த மனவலிமை உடையவள்.
பழகிடும் அனைவர்க்கும் பாசக்காரி – எதையும்
“முடியும்” என்றுணர்த்திடும் ரோசக்காரி
ஆண்களுக்கு நிகராக பகைக்கலங்கள்
அழிக்கத் திடங் கொண்ட அடங்காப்புலி
அண்ணனையே உன் “அம்மா” என்றாய்
அவர் நினைப்பவற்றை செயலாய் வடித்தாய்
அத்தனை கடற்புலி மகளிர்க்கும் – நீயே
அன்பும் அறிவும் ஊட்டிய “புலித்தாய்”
ஆழக்கடல் தொட்டு அலை கரை வரை
அறிந்து விரிந்த உன் அனுபவம்
நடுநிசியின் நட்சத்திரங்கள் சொல்லும்
திசையறிந்து நீர்கிழிக்கும் உன் கடற்கலம்
கரும்புலியாவது உன் நெடுங்காலக் கனவு
காயங்கள் கண்டபோதும் கலங்கவில்லை உன் மனது
விடைபெற்று நீ விரைந்துபோகத்துடித்தாயே
வெற்றி படைத்து கப்பல் தகர்த்து வெடித்தாயே
சொல்லி முடியாது உன் வரலாறு
வெல்லும் பொழுதுக்கு நீ ஓர் ஒளிக்கீற்று
வல்வை மண்தந்த மாதவளே – நீ
வணக்கத்துக்குரியவள் அக்கா
கலைமகள்

