15-07-2021
ஊடக அறிக்கை
ஜோசெப் ஸ்ராலின் உள்ளிட்ட 16 பேரதும் கைதை கண்டித்தும் உடனடி விடுதலையை வலியுறுத்தியும் இலங்கை ஆசிரியர் சங்கம் நடாத்தும் போராட்டத்திற்கு த.தே.ம.முன்னணி பூரண ஆதரவு.
கோட்டாபய ராஜபக்ச அரசு தனது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் இராணுவ ஆட்சியை நோக்கியே நகர்த்திச் செல்கின்றது. அதன் ஒரு அங்கமாக கல்வித் துறையையும் இராணுவ மயமாக்கும் திசையில் நகர்த்தும் நோக்கில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட வரைபை முன்வைத்துள்ளது. அத்தகைய இராணுவ மயமாக்கல் நடவடிக்கைக்கு எமது எதிர்ப்பை நாம் தெளிவாக பதிவு செய்துள்ளோம்.
அதே வேளை பல அமைப்புக்கள் ஜனநாயக ரீதியாக தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பொறுப்புள்ள ஓர் ஆசிரியர் சங்கம் என்ற அடிப்படையில், இலங்கை ஆசிரியர் சங்கமும் ஜனநாயக ரீதியாகத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தது. அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத அரசு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேரையும் சட்டவிரோதமான முறையில் சட்டவிரோதமாக கைது செய்தது. நீதிமன்றத்தால் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டிருந்த பின்பும், தனிமைப்படுத்தலை காரணம் காட்டி 350 கிலோ மீற்றர் தூரத்திற்கு அப்பால் முறையற்ற விதமாக முல்லைத்தீவு விமான படை தளத்தில் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர். அரசின் இந்த ஜனநாயக விரோத செயற்பாட்டினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், ஜோசெப் ஸ்ராலின் உள்ளிட்ட 16 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றோம்.
இராணுவ மாயமாக்கலை நோக்கமாகக் கொண்டு ஜனநாயக குரல் வளையை நசுக்கும் நோக்கில் அரசு மேற்கொண்ட மேற்படி சம்பவத்தினைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களது விடுதலையை வலியுறுத்தியும்
வெள்ளிக்கிழமை (16-07-2021) காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் பஸ் நிலையத்துக்கு முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தால் நடத்தப்படவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பூரண ஆதரவு வழங்குகிறது.
நன்றி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்
செ.கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர் பொதுச் செயலாளர்