10.03.2021
அன்பிற்கினிய தமிழ் மக்களே…..
அகிம்சை வழியிலும் வழிகாட்டிகளான தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களும், அகிம்சைத்தீயில் ஆகுதியான தியாகி லெப் கேணல் திலீபன், தியாகி அன்னை பூபதி அம்மா அவர்களின் வழி நின்று உண்மைக்கும், நீதிக்குமான நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் சாகும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் அறவழிப்போராளி திருமதி அம்பிகை செல்வக்குமார் அவர்களின் உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முன்னெடுப்புக்களை ஒவ்வொரு தமிழரும் உணர்வு பூர்வமாக செயற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எந்தவொரு பின்புல உதவிகளும் அற்று தனித்து முன் நகர்த்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வகிபாகம் என்பது வரலாற்றில் யாருமே மறுக்க முடியாத , என்றுமே மறக்க முடியாத உண்மையாகும்.
2009 மே 18 இற்கு பின்னர் பல்வேறு தளத்தில் ஜனநாயக வழிகளில் மக்கள் எழுச்சியோடு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. காலங்காலமாக எமது இனம் சிங்கள பேரினவாதத்தால் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு , உரிமைகள் மறுக்கப்பட்டு பல இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து சொந்த மண்ணிலேயே நிர்கதியாகி உலகெங்கும் ஏதிலிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
யுத்தம் முடிந்து 12 வருடங்களை கடந்த நிலையில் தமிழருக்கான நியாயமான நீதியான தீர்வு இதுவரை கிடைக்கவில்லை. நீதிக்கான அறவழிப் போராட்டங்களை தாயகத்திலும் , புலம்பெயர் தேசங்களிலும் எமது மக்கள் புரட்சியோடு தன்னெழுச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம், தற்போது பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் அறப்போராளி திருமதி அம்பிகை செல்வக்குமாரின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் என்பன எமது இன விடுதலைக்கான அவசியத்தை கட்டியம் கூறி நிற்கின்றது.
தமிழினப் படுகொலைக்கு பக்கபலமாக நின்று சிங்கள இனவாத அரசிற்கு சகல விதத்திலும் உதவிய சர்வதேசம் எதிர்வரும் காலங்களிலாவது உண்மையான, நேர்மையான ஒரு போர்க்குற்ற விசாரணையை மேற்கொண்டு இலங்கை பேரினவாத அரசை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தி எம் இனத்திற்கான வாழ்வுரிமைகளை பெற்றுத்தரும் என்ற எதிர்பார்ப்போடு தமிழ் இனத்தின் தாய் ஒருவர் உணவுத் தவிர்ப்பு உண்ணாநிலையை, தீராத நம்பிக்கையோடு தொடர்ந்து கொண்டிருக்கிறார். தமிழினமே விழித்தெழுந்து “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் ” என்று தொடர்ந்து நாம் அனைவரும் போராடுவோம் என்ற ஆதீத நம்பிக்கையில் அன்னை அம்பிகை அவர்கள் அகிம்சை வேள்வியில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்.
இப்போராட்டம் உலகப்பரப்பில் மக்கள் எழுச்சியையும், மக்கள் தன்னெழுச்சி போராட்டங்களையும் உருவாக்கிவிட்டுள்ளது. எமது இனத்திற்கான நீதியை வழங்க மறுத்து வரும் உலகின் மனச்சாட்சி கதவுகள் திறக்கும் வரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்.
விடுதலைப் புலிகளின் கடற்புலிகளாகிய நாம் எமது இன விடுதலைக்கான மக்கள் எழுச்சி போராட்டங்களிலும், உங்களைப்போன்ற அனைத்து எழுச்சி போராளிகளோடும், இறுதி வரை என்றுமே உறுதுணையாக நின்று தொடர்ந்து பயணிப்போம் தாயகம் நோக்கி………
" புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் "
தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள்
கடலிலே காவியம் படைப்போம்

