யாழ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த முள்ளிவாய்க்கால் தூபி சிறிலங்கா காவல்துறைனரால் இடித்து தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து கவலையும், கோபமும் அடைந்த தமிழ் மாணவர்கள், பொதுமக்கள் பல்கலைக்கழக வாசலை அடைத்து இரவிரவாகப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
பல்கலைக்கழக வளாகத்துக்குள் நிர்வாக அதிகாரிகள் சிலர் உள்ளனரெ தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இரு மாணவர்களை கோப்பாய் பொலிஸார் கைதுசெய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன
முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரலில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.
எனினும், முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் முடிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இரண்டரை ஆண்டுகளின் பின் அந்த நினைவிடத்தை தற்போதைய ராஜபக்ச அரசு இடித்தழித்துள்ளது.










