சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

0 0
Read Time:6 Minute, 16 Second

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழீழ விடுதலைக்காகவும், தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அமைப்பின் மரபிற்கமைய, அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 11:00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

தமிழீழத்தின் பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து சேகரிக்கப்பெற்ற புனித மண்ணையும், கல்லறைக் கற்களையும், சீருடையின் சாட்சியாக எம்மிடம் சேர்க்கப்பெற்றவற்றையும் மாவீரர்களின் பிள்ளைகளால் அரங்கிற்கு எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்ல நிகழ்வுகள் உணர்வுடன் ஆரம்பமாகின.

தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன், காலத்தின் தேவை கருதி தமிழீழத் தேசியத் தலைவர்; அவர்களின் 2008ஆம் ஆண்டின் தேசிய மாவீரர் நாள் உரை அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அனைத்துலகதொடர்பகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒளிபரப்பப்பட்டது. சங்கொலி, பறையிசை, மணியொலி எழுப்பலுடன் அகவணக்கத்தினைத் தொடர்ந்து 13:30 மணியளவில் முதன்மைச் சுடரேற்றப்பட்டு துயிலுமில்லப் பாடலோடு மலர்வணக்கப் பாடலும் ஒலிபரப்பப்பட்டது. மக்களால் மலர், சுடர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில்; மாவீரர்களுக்கான வணக்கப்பாடல்களும் காணிக்கையாக்கப்பட்டது.

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் சுவிஸ் நிகழ்வில், சுவிசின்; அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் திருவுருவப் படங்களுக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் தேசிய உணர்வையும், இலட்சியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

மிகப் பிரமாண்ட அரங்கில் 1700 இற்கு மேற்பட்ட மாவீரர்களின் திருமுகங்கள் ஏற்றப்பட்ட சுடர்களிலே ஒளிவீச, முதன்மை கோபுரமும் அடிக்கற்களின் தடையகற்றிகளின் கோபுரமும் நடுகல்நாயகர்களின் கோபுரமும் கரும்புலிகளின் கோபுரங்களும் நிமிர்ந்து நிற்க, நாட்டுப்பற்றாளர், மாமனிதர்கள் திருவுருவப்படங்கள் உணர்வோடு சங்கமிக்க, முள்ளிவாய்க்கால் நினைவு மக்கள் தூபி தமிழின அழிப்பின் சாட்சியாய் நிற்க, தமிழீழத் தேசியச் சின்னங்கள் அரங்கு முழுவதையும் எழுச்சியூட்ட, தமிழீழத்தேசியக்கொடி பட்டொளி வீச, மாவீரர் குடும்ப உறவுகளின் உணர்வலைகள் மாவீரம் சொல்ல குழந்தைகள், சிறுவர், இளையோர், உணர்வாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்களென எல்லோரும் மாவீரர் நினைவுகளோடு உறைந்திருந்து உறுதி எடுத்துக்கொண்ட காட்சி மாபெரும் வரலாற்றுப் பதிவாகும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையின் கொள்கை விளக்கப்பேச்சும் நிகழ்த்தப்பட்டதுடன், தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் நடாத்தப்பட்ட மாவீரர்; நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டது. சுவிஸ் தமிழர் அரசியல் துறையினால் முன்னெடுக்கப்பட்ட கல்வியியல் ரீதியில் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளில் தமிழ், தமிழீழம் மற்றும் எமது போராட்ட வரலாற்று விழுமியங்களை ஒப்படை வடிவில் சமர்ப்பித்து சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் மேடையில் மதிப்பளிக்கப்பட்டனர்.

எத்தடை வரினும் அத்தடை உடைத்து தமிழீழத் தேசியத் தலைவரது வழிகாட்டலை ஏற்ற மக்களாக தமிழீழத்தை மீட்போம் என்ற உறுதியுடன் ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி கையேற்றல், தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நிறைவுபெற்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment