பிரித்தானியாவை தளமாக கொண்டு செயற்பட்டு வரும் ஐ.எல்.சி. தமிழ் வானொலியின் 15 ஆவது நிறைவாண்டை முன்னிட்டு இடம்பெற்ற சிறப்பு நிகழ்வின் போது தாயக ஊடகவியலாளர் இரா.மயூதரனுக்கு ‘மக்கள் குரல்’ விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் ஊடகப்பரப்பில் தனக்கென சிற்பான இடத்தை கொண்டிருந்த ஐபிசி தமிழ் வானொலியை, மூத்த ஊடக செயற்பாட்டாளர் தாசீசியஸ் மாஸ்ரர் தலைமையிலான குழுவினர் உருவாக்கி வழிநடத்தியிருந்தனர். ஆயுத மௌனிப்புடன் ஏற்பட்ட நிர்வாக குழப்பங்களை அடுத்து அதிலிருந்து வெளியேறி, நீண்டகால தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் சூசைப்பிள்ளை றூபேட்/தனம் அவர்களை பிரதான செயற்பாட்டாளராக கொண்டு 2010 ஆம் ஆண்டு மே 5 ஆம் திகதி ஐ.எல்.சி. தமிழ் வானொலியை உருவாக்கி இன்றுவரை நடத்தி வருகின்றனர்.
புலம்பெயர் ஊடகப்பரப்பில் தமிழ்த் தேசியம் தொடர்பில் சமரசமின்றி கருத்தாடல், ஆய்வு நிகழ்ச்சிகளை நடத்தி புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களிடையே தமிழ்த் தோசியம் தொடர்பான விழிப்புனர்வை ஏற்படுத்தி வரும் ஐ.எல்.சி. தமிழ் வானொலி கடந்த மே 05 ஆம் திகதி 15 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடாடியது.
இந்நிகழ்வின்போது மூத்த ஊடக செயற்பாட்டாளர் தாசீசியஸ் மாஸ்ரருக்கு ‘தமிழ் ஊடக வித்தகர்’ விருது, கு.யோ. பற்றிமாகரன் மற்றும் புலவர் நல்லதம்பி சிவநாதன் ஆகியோருக்கு ‘தமிழ் ஊடகத்திற்கான சேவை’ விருது, போரியல் ஆய்வாளர் அருஸ் (பிரித்தானியா), அரசியல் பொருளாதார ஆய்வாளர் நேரு குணரட்ணம் (கனடா), ஊடகவியலாளர் இரா.மயூதரன் (இலங்கை) ஆகியோருக்கு ‘மக்கள் குரல்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதேபோன்று ஐ.எல்.சி. தமிழ் வானொலியின் முதன்மை நெறியாளர் தனா ஞானி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களான அமிர்தலிங்கம், றெனி, லட்சுமி, கங்கா, சிவா சிவப்பிள்ளை, பருத்திவீரன், கிருபா, கலா ராஜன், சத்தியசீலன் ஆகியோருக்கும் ‘மக்கள் குரல்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
சிறந்த ஊடக பங்களிப்புக்கான விருது முல்லை அமுதன், முகிலினி, கனிமொழி, தாசன், ரஞ்சினி, சண் ஜோன்சன், கண்ணன், ஜோக்கிம் இருதயனந்தன், அருள் அழகையா, பேளின் சேகர், இலக்கியன், சந்துரு, குமார் தயாகரன், ரவி சங்கர், ஜெதுர்சன், பூர்வஜா, ஜனனி, லெதுஜா, அருஸ், ஸ்ரிபன், ஆனல்ட், திருவாசகம், கோகுல் தியாகராஜா, வேல்தர்மா ஆகியோருக்கு வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், லண்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்துவரும் ஐ.எல் சி. தமிழ் வானொலியின் நேயர்கள் என பலருடைய பங்கேற்பில் அரங்கம் நிறைந்த நிகழ்வாக இடம்பெற்றிருந்தது.
இதேவேளை, ஐ.எல்.சி. தமிழ் வானொலியின் தாயக செய்தியாளராக செயற்பட்டு வரும் இரா.மயூதரனுக்கு வழங்கப்பட்ட ‘மக்கள் குரல்’ விருதினை அவர் சார்பில் நிகழ்வு மேடையில் போரியல் ஆய்வாளர் அருஸ் அவர்களால் பெறப்பட்டு, அமெரிக்காவில் வசித்துவரும் ஐ.எல்.சி. வானொலி செயற்பாட்டாளரான விக்னேஸ்வரன் அவர்கள் ஊடாக கடந்த தினத்தில் நேரில் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







