காலில் காயம்பட்டதனால் உனக்கும்
வலித்திருக்கும், ஆனாலும்
காடுமேடெல்லாம் உன் கால்கள்
நடக்கத் தயங்கவில்லை,
ஆதலால்தான், எம் கானகமும் நிலமும்
களவுபோகாமல் காக்கப்பட்டது…
உப்பு நீரலைகள் உன் முகத்திற்பட்டு
எரிச்சலூட்டியிருக்கும், ஆனாலும்
எம் கடல்மேல் நீ கொண்டகாதல்
வற்றிப்போய்விடவில்லை,
ஆதலால்தான், எம் கடலின் எல்லைகள்
கவனமாகப் பாதுகாக்கப்பட்டன…
வானில் பறப்பதை ஒரு கனவாக
எண்ணி நாட்கள் நகர்ந்திருக்கும்,
ஆனாலும் அந்த வல்லமைதனை
வரவழைத்துக்கொண்ட சிந்தனை
உன்னுள் உறங்கிக் கிடக்கவில்லை,
ஆதலால்தான், வானமும் ஒருநாள்
எம் வசப்படுகின்ற வரமும் கிடைத்தது…
வேட்டொலியும், பீரங்கி முழக்கங்களும்
உன்னைப் பயமுறுத்த முயற்சித்திருக்கும்,
ஆனாலும் வீரனே! உன்னுள் ஒலித்த
“சுதந்திர முழக்கத்தை” அவற்றினால்
வெற்றி கொள்ளமுடியவில்லை.
ஆதலால்தான் எல்லாத் திசையிருந்தும்
விடுதலையூற்று வீரப்பிரவாகமெடுத்தது
(பிரபாகரமெடுத்தது)…
-காந்தள்-