ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமைவாய்ந்த, தொன்மையான திருகோணமலை சேருவில் திருமங்களாய் ஆலயத்திற்குச் சென்று அப்பகுதி மக்களைச் சந்தித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தொல்பொருட் திணைக்களம் மற்றும் அரச இயந்திரத்தின் ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இப்பகுதிகளில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்த போதும், 1964க்கு பின்னர் சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள பௌத்த குடியேற்றங்களாலும், தமிழருக்கெதிரான வன்முறைகளாலும் அப்பகுதியிலிருந்து தமிழர்கள் வெளியேறிய நிலையில் தற்போது அடர்ந்த வனப்பகுதியாக காட்சியளிக்கின்றது.
இப்பகுதிகளில் அண்மைய ஆய்வுகளின் போது 05 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 03 கல்வெட்டுக்கள் 10-11 நூற்றாண்டுக்குரியதெனவும், 02 கல்வெட்டுக்கள் 14ம் நூற்றாண்டுக்குரியதெனவும் கருதப்படுகின்றது.
இந்தக் கோவிலை ஆக்கிரமிப்பதற்கு தொல்பொருட் திணைக்களம் முயற்சிகளை எடுத்துள்ளது.
சிறிலங்கா பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண, கடும்போக்கு பௌத்த சிங்கள இனவாதியான ஞானசார தேரர் போன்றவர்களை உள்டக்கி உருவாக்கப்பட்ட தொல்பொருட் செயலணி மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பல தொன்மைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அவை பௌத்த சிங்கள சின்னங்களாக மாற்றும் செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.








