நாவற்குழிப் படைத்தளத்திலிருக்கும் இந்திய இராணுவம் முன்னேறினால் மோதவென கோப்பாயில் பதினைநது பேர் கொண்ட பெண்களணி தயாரானது. கைகளில் இரண்டொரு நாட்களின் முன் அவசர அவசரமாக வழங்கப்பட்ட AK 47, ஒரேயொரு ரவைக்கூட்டுடன் அதுகூட எல்லோரிடமுமில்லை.
ஏனையவர்கள் ரவைகளைத் துணி முடிச்சில் கட்டியபடி, குண்டுகளுடன். 2ஆம் லெப் மாலதி, 2ஆம் லெப் கஸ்தூரி, வீரவேங்கைகள் விஜி, ஜெனா, தயா, ரஞ்சி தம்மிடம் உள்ளவற்றுடன் தயார் நிலையில்.

முன்னேறிவந்த இந்தியப் படைகளுக்கும், இவர்களுக்கும் சண்டை ஆரம்பித்தது. கடும் சண்டை. ரவை முடிய முடிய நிரப்பி நிரப்பிச் சண்டை. பெரும் பலத்துடன் பெருந்தொகையில் வந்து நின்ற உலகின் அன்றைய நான்காம் வல்லரசுப் படைகளோடு நின்று சண்டையிட முடியாத களநிலைமை எம்மவர்களைக் கோப்பாய் சந்திநோக்கி, சண்டையிட்டவாறு பின்னநகர்த்தத் தொடங்கியது.

மாலதிக்குத் தொண்டையில் பெருங்காயம். நடக்க முடியவில்லை. இராணுவமோ நெருங்கிக்கொண்டிருந்தது. மாலதியை இழுத்துச் செல்ல விஜி முயற்சித்துக்கொண்டிருந்தார். முடியவில்லை. வல்லரசுப் படைகளுடனான போரில் தன்னால் இழப்பு வரக்கூடாது என்று முடிவெடுத்த மாலதி சயனைட்டை அருந்தினார். ” என்னை விட்டிட்டு ஆயுதத்தைக் கொண்டுபோய் அண்ணையிட்டைக் குடு ” என்றபடி தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் மாவீரரானார்.
– மலைமகள்


