காலங்கள் கலைந்தோடி
கானலாய் மறைந்ததுவோ!
காலனவன் கடுதி வேகம் கொண்டது ஏனோ?
காலையில் வந்த செய்தி என் கழுத்தறையை நசுக்கி
கதிகலங்க வைத்தக்கா?
கனவுகள் சுமந்து கனதூரம் கடந்து
களத்தில் கையில்விழுப்புண்அடைந்தும்
கணக்காய்வுப்பணியை கண்ணியமாய் ஆற்றியதை எப்படி மறப்பது!
நிதித்துறையின் நிமிர்ந்த நன்னடை கொண்ட நேரிய போராளியாய்
கல்வியுறை வேங்கையாய் அனைவருக்கும் அறிவுரை
ஆசானாய்
வலம் வந்தீர்கள்!
வன்னியில் முகாமைத்துவ முதல் மாணவியாக சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்றீர்கள்!
கவிஞர் முருகேசின் முதல் முத்தாய்
கரிகாலன் சேனையில் அணிதிரண்டு
களத்திடை அக்காவும தங்கையுமாய்
வீறுநடை போட்டீர்கள்!
“கூட்டை விட்டுப்பறந்த இரு குருவிகள்” எனும் சிறுகதைக்கு கருவாய் தந்தையின் எழுத்தாணிக்கு மகத்துவம் தந்தீர்கள்!
இன்று உங்கள் இரு கண்மணிகளை கலங்க விட்டு காலனவன் அணைத்தது ஏனோ?
அப்பாவாய் ,அம்மாவாய் , எல்லாமாய் உங்களைப்பார்த்த குஞ்சுகள் கதிகலங்கித் தவிக்கிறார்கள்!
மூன்று வருடங்களாக இறுகப்பிடித்த
உங்கள் ஆத்மாவை கலைந்து போக
ஏனக்கா விட்டீகள் ?…….
உறுதியின் உறைவிடமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பழகும் தோழிகளிற்கு
நட்பின் இலக்கணமாய்
தங்கைகளின் அறிவுரை அக்காவாய்
சேரவாணிபத்தளபதியின் அன்பு மனையாளாய் வலம்வந்த நீங்கள்
இன்று மீளாத்துயில் கொண்டு எங்களை ஆறாத்துயரில் விட்டுச்சென்றது ஏனோ?….
உங்கள் ஆத்மா அமைதி கொள்ள
ஆயிரம் கரம் கூப்பி வணங்குகின்றோம் அக்கா!🙏🙏🙏🙏
அன்புத்தங்கை விழி