தமிழீழ விடுதலைப்புலிகளின் தொடக்க காலகட்டத்தில் ஆங்காங்கே இலங்கை இராணுவத்தினர்மீதான சிறுசிறு பதுங்கித்தாக்குதல்களை விடுதலைப்புலிகள் மேற்கொண்டனர்.பெரும்பலும் மக்களைப்பாதுகாக்கவும்,இராணுவத்தினரின் கெடுபிடிகளைக் கட்டுப்படுத்தவும்வேண்டி இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன எனலாம். விடுதலைப்புலிகள் இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்ளும்போது பொதுமக்கள் பலரும் பல்வேறு வகையில் தம்மாலான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி விடுதலைக்கு வலுச்சேர்த்த வரலாறுகளும் பல உண்டு.
இங்கே ,1984 ம் ஆண்டு செப்ரெம்பர் 10ம் தேதி முல்லைத்தீவு -திருகோணமலை பிரதான வீதியில் செம்மலையிலிருந்து நாயாறு நோக்கி சுமார் 1மைல் தூரத்தில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட கண்ணிவெடித்தாக்குதல் பற்றிப் பதிவு செய்ய விளைகின்றேன். அதை விபரிக்குமுன் அத்தாக்குதலைத் திறம்பட நடாத்திமுடித்த கப்டன் லோரன்ஸ் அவர்களைப்பற்றிக் குறிப்பிட்டாகவேண்டும். முல்லைத்தீவு மணலாற்றுப்பிரதேச அநேகமான மக்களுக்கு அவரைத்தெரியும். அதிலும் செம்மலைக்கிராம மக்களின் வீடுகளில் லோரன்சும் ஒரு பிள்ளை எனுமளவு மக்கள் மனங்களில் இடம்பிடித்த ஓர்சிறந்த போராளி .எப்போதும் சிவந்தே காணப்படும் கண்களில் விடுதலை வேட்கையும் ,சுறுசுறுப்பான செயற்பாடுகளும் மக்கள்மீது அவர்காட்டும் அன்பும் தமிழீத்தாயத்திற்கொண்ட அளவுகடந்த பற்றும் அவரை எல்லோர் மனங்களிலும் பதியவைத்துவிட்டது.அவரைப்போன்ற பல போராளிகளால்தான் போராட்டம் உச்சநிலைக்கு வளர்ந்தது என்றால் மிகையல்ல.
அப்போதெல்லாம் இலங்கை இராணுவம் தனது விருப்பிற்கேற்ப அடாவடித்தனங்களைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. அடிக்கடி சுற்றிவளைப்புகளும் கைதுகளும் மக்களின் வாழ்வை நிம்மதியற்ற நிலைக்குள்தள்ளியிருந்தது.
நாயாற்றில் தமிழரின் பூர்வீக நிலத்தில் சிங்களமீனவர்களைக்குடியமர்த்தி ,அவர்களுக்குப் பாதுகாப்புவழங்குவதற்காகக் கொக்கிளாயில் இராணுவமுகாம் ஒன்றை இலங்கை இராணுவம் நிறுவியது.இதனால் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய்க்கும்,கொக்கிளாயிலிருந்து முல்லைத்தீவுக்குமாக இராணுவ வாகனத்தொடரணிகளின் போக்குவரவு அதிகமாகியது.கூடவே, இடையில் நாயாற்றிலிருந்த சிங்களவர்களுக்கு அது பெரும் பலத்தையும் கொடுத்தது.
மேலும் மேலும் அதிகரித்த இராணுவ நடவடிக்கைகளால் மணலாற்று மக்கள் சொந்த வீடுகளில் அச்சத்துடன் வாழும் நிலையை எதிர்கொண்டனர். தமிழீழ விடுதலைப்புலிகளால் மட்டுமே இந்நிலையை மாற்றமுடியும் என்பது மக்களின் அசையாத நம்பிக்கையாவிருந்தது.
இவ்வேளையில் இலங்கை இராணுவத்திற்குத் தகுந்த பாடங்கற்பிக்கவேண்டி ஒரு கண்ணிவெடித்தாக்குதலை நடாத்த விடுதலைப்புலிகள் திட்டமிட்டனர். இதற்குச் செம்மலைவாழ் மக்களிற் சிலரும் பக்கபலமாக நின்றனர்.கப்டன் லோரன்ஸின் தலைமையில் பணிகள் ஆரம்பமாகின.இராணுவத்தின் போக்குவரவு தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்டதோடு தாக்குதலுக்கான நாளும்,இடமும் தீர்மானிக்கப்பட்டது. ஆயினும் அன்றையநாள் நிச்சயமாக இராணுவ வாகனம் வருமா என்பது கேள்வியாகவிருந்தது. அதனால் முல்லைத்தீவிலிருந்து இராணுவத்தை நாயாறுக்கு வரவழைக்க முடிவெடுத்தனர் புலிகள்.இதன்படி அளம்பிலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த சிங்களவர்களின் லொறிக்குச் செம்மலை இளைஞர்கள்சிலர் கற்களை விட்டெறிந்துவிட்டு ஓடிவிட்டனர்.இச்செய்தி முல்லை இராணுவத்தைச்சென்றடைய அங்கிருந்து இராணுவத்தை நிரப்பியவாறு ஒரு ஜீப்வண்டியும் ஒரு துருப்புக்காவி(ரக்)வண்டியும் விரைந்து வந்தது.அழைத்து அடிப்பதென்பது இதுதான் போலும்.
இதற்கு முன்னையநாள் சைக்கிளில் புறப்பட்ட கப்டன் லோரன்ஸ் அவர்களும் போராளிகள் சிலரும் செம்மலைக்கும் நாயாற்றுக்குமிடையில் 9 ம் கட்டையில் மக்கள் குடிகள் அரிதான இடத்தைத்தெரிவுசெய்து கண்ணிவெடியைக்கவனத்துடன் தடயமேதுமின்றிப் புதைத்துவிட்டு அருகிலுள்ள பற்றைகளுக்குள் பதுங்கியிருந்தனர்.அவர்களுக்கான உணவுப்பொதிகளை நேரத்துக்குநேரம் மக்கள் கொண்டுசென்று கொடுத்தனர்.அத்தோடு இராணுவத்தினரின் நகர்வும் மக்களால் அறியப்படுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.ஆகமொத்தம் புலிகளும் மக்களும் இத்தாக்குதல் சரியாக இடம்பெறுவதற்கான எல்லாநடவடிக்கைகளையும் செவ்வனே நிறைவேற்றினர் என்பதோடு சரியான நேரத்திற்காகக்காத்திருந்தனர் எனபதே விடயம்.
நேரம் மதியத்தை நோக்கி நகர்கிறது.
விரைந்துவந்த ஜீப்வண்டியும் துருப்புக்காவியும் நாயாற்றைச்சென்றடைந்து திரும்பிவரும்வரை காத்திருந்தனர் போராளிகள்.ஜீப்வண்டி சரியாகக் கண்ணிவெடியிடத்தை அடைய வெடி வெடிக்கவைக்கப்பட்டது.இதனைச்சற்றும் எதிர்பாராத இராணுவம் நிலைகுலைந்தது. ஜீப் முற்றிலும் சிதறியது அதிலிருந்த இராவத்தினர் அந்த இடத்திலேயே உயிரைவிட்டனர்.பலர் படுகாயமடைந்தனர்.துருப்புக்காவியின் முன்பக்கமும் சேதத்திற்குள்ளானது.இன்னும் சில இராணுவத்தினர் செய்வதறியாது கடற்ரைப்பக்கமாக ஓடி மீனவர்குடில்களில் தஞ்சமடைந்தனர். பீதியடைந்த சிலர் ஒடிச்சென்று மரங்களில் ஏறி ஒளிந்தனர்.சிறிய துப்பாக்கிச் சண்டையுடன் புலிகள் அவ்விடத்தைவிட்டகன்றனர்.ஏனெனில் அந்த இடம் தொடர் சண்டைக்கேற்றதல்ல என்பதே.
இத்தாக்குதலில்10க்கும் மேற்பட்ட இராணுவம் கொல்லப்பட்டதுடன் பல இராணுவத்தினர் படுகாயமடைந்தனர். சிலமணிநேரத்தின்பின் கொக்கிளாயிலிருந்து வந்த இராணுவம் செம்மலைப்பகுதியில் மக்கள்குடிருப்புகளை நோக்கிச் சரமாரியாகச்சுட்டதில் இளைஞர் ஒருவரின் கால் சிதைவுக்குள்ளாகிப்பின்னர் கால் துண்டிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வெற்றிகரத்தாக்குதலில் வீரச்சாவடைந்த..
லெப்டினன்ட் எட்வின்
இரத்தினசபாபதி திலீபன்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
அவர்களையும்.நினைவுகூருகின்றோம்.
வீரப்பிறப்பு:
07.11.1965
வீரச்சாவு:
10.09.1984
அக்காலகட்டத்தில் அது ஒரு வரலாற்று முக்கியம்வாய்ந்த வெற்றித் தாக்குதலாக அமைந்தது.
இத்தாக்குதலுக்காகக் கப்டன் லோரன்ஸ்(வீரச்சாவு 25.10.1985) அவர்கள் ஓட்டிச்சென்ற சைக்கிள் பற்றைகளின் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டது.அது ஆதரவாளர் ஒருவருடையது.மீண்டும் இராணுவம் வந்து தேடுதல் வேட்டை நடத்தினால் மக்களுக்கும் இத்தாக்குதலுக்குமான நேரடித்தொடர்புவெளிப்பட்டுவிடும் என்பதனால் ,ஆபத்து என்று தெரிந்தும் ஆதரவாளர்கள் இரவோடிரவாகத்தாக்குதல்நடந்த இடத்திற்குச்சென்று சைக்கிளை எடுத்துவந்துவிட்டனர்.
தமிழீழத்தேசியத்தலைவர் அவர்கள், இத்தாக்குதலுக்கு உதவிய மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கப்டன் லோரன்ஸ் அவர்களைப் பணித்தார்.ஆயினும் முக்கியமான பணிகளின்மூலம் ஒத்துழைப்புவழங்கிய இளைஞர்கள் சிலர் தாமாகவே மணலாற்றுக்காட்டின்ஓரமாகத்தலைமறைவாகத்தங்கி யிருந்து நிலைமையைப்பார்த்துத் தாம் ஊர்திரும்புவதாகத்தெரியப்படுத்தி அவ்வாறே 3 நாட்களின் பின் மீண்டனர்.இவை பலரும் அறியாத தாக்குதலுக்குப்பின்னான நிலவரங்கள்.இப்படி இன்னும் ஏராளம் உண்டு.
இவ்விடயங்கள் மக்களோடு புலிகளுக்கிருந்த நலுலுறவையும் ,புலிகள்மீது மக்களுக்கிருந்த அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தி நிற்பதைக்காணலாம்.
எழுத்துருவாக்கம்..
கலைமகள்
10.09.2021