யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கு பிணை வழங்கியது அரசாங்கமா? அல்லது நீதிமன்றமா? என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தமை குறித்து கருத்து வெளியிடும் போதே சி.வி.விக்னேஸ்வரன் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,
யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளிப்பதாகத் தன்னிடம் கூறினார் என ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், மணிவண்ணன் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்படுவதற்கு முன்னராகவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்படுவார் என்றும் அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படமாட்டாது என்றும் சாதாரண சட்டத்தின் கீழேயே வழக்கு தொடரப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்தக் கூற்று இந்த நாட்டில் நீதிமன்றங்களும், காவல்துறையினரும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றனவா என்ற கேள்வியையும் ஜனாதிபதியினதும் அவரின் அரசாங்கத்தினதும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்பவே அவை செயற்படுகின்றனவா என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மணிவண்ணன் அரசியல் உள்நோக்கம் கருதி, வேண்டும் என்றே கைது செய்யப்பட்டிருக்கின்றார் என்ற உண்மையையும் அமைச்சரின் கூற்று வெளிப்படுத்தி நிற்கின்றது.
மணிவண்ணனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு அளித்தது உண்மை என்றால், மணிவண்ணன் ஏதோ தவறு செய்துள்ளார் என்று அர்த்தப்படும்.
ஆனால், மணிவண்ணன் செய்தது தவறு என்று காவல்துறையினரால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியவில்லை. ஆகவே, ஜனாதிபதி என்ன அடிப்படையில் மணிவண்ணனுக்கு “மன்னிப்பு” வழங்கியுள்ளார்?
அமைச்சர் ஏற்கனவே கூறியதுபோலவே, மணிவண்ணன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் அவர் மீது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் காவல்துறை திணைக்களமும் நீதிமன்றங்களும் எந்தளவுக்குச் சுயாதீனத்தை இழந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதற்கான ஆதாரமாக இவை காண முடிவதாக சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதுதொடர்பில், ஜனாதிபதியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.