யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மீள் நிர்மானம் செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக மாணவர்களல் உறுதியளித்தபடி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நிiவாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இரவு முன்னறிவித்தல் இன்றி பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்தழிக்கப்பட்டது.
இடிக்கப்பட்ட தூபியை மீள அமைக்க அனுமதி வழங்கக் கோரி பல்கலை மாணவர்கள் 9 பேர் உண்ணாவிரத போராட்டத்தனை ஆரம்பித்தனர். அவர்களுடைய போராட்டத்துக்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகியது. இதனால் பல்கலை நிர்வாகத்தினருக்கும் அழுத்தம் ஏற்பட்டது. அதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் தூபியை அதே இடத்தில் மீள் அமைப்பதற்கு சம்மதம் தெரிவித்த துணைவேந்தர், அதற்கான அடிக்கல்லையும் ஜனவரி 11 ஆம் திகதி நாட்டிவைத்து மாணவர்களின் போராட்டத்தினையும் நிறைவு செய்து வைத்தார்.
குறித்த தூபியை பல்கலைக்கழகத்துக்குள் அமைப்பதற்கு சமாதன தூபி என்ற பெயரிலேயே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருந்த தூபியின் வடிவமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு குறித்த புதிய தூபி அமைக்கப்பட்டுள்ளது.
18 அடி கொண்ட தூண் வடக்கு பக்கமாகவும் 5 அடிகொண்ட தூண் கிழக்குபக்கமாகவும் அமைக்கப்பட்டு நடுவில் ஏற்கனவே இருந்த முள்ளிவாய்க்கால் தூபி கட்டப்பட்டு சுமார் 20 லட்சம் பெறுமதியில் இந்த தூபி அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த தூபிக்கான பணம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டே கட்டப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த தூபி அமைப்பதற்கு மாணவர்களால் முள்ளிவாய்க்காலில் இருந்து மண் எடுத்துவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த தூபி பெரும் சிரமத்தின் மத்தியில் அமைக்கப்பட்டிருந்தாலும் தற்போதும் அதை துறந்து வைப்பதிலும் பல அழுத்தங்கள் இருப்பதாக தெரிய வருகிறது.
துணைவேந்தரினால் (23.04.2021) இன்று தூபி திறந்துவைக்கப்படும் என அறிவித்திருந்த போதிலும் நேற்று முன்தினம் இரவு துணைவேந்தர் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு மாணவர்களால் இந்த தூபி திறந்துவைக்கப்பட்டது. பத்திரிகையாளர்கள் எவருக்கும் நிகழ்வினை புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. திறந்துவைத்த மாணவர்கள் மூலமே புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் மாணவர்கள் மீது தீவிர அழுத்தம் காரணமாக அவர்களும் தங்களது அடையாளங்களை இனங்காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.