இலங்கை உள்நாட்டுப் போரில், பிரித்தானிய கூலிப்படையினர் தொடர்புபட்ட போர்க்குற்றங்கள் குறித்து பெருநகர காவல்துறையினர் (Metropolitan Police) விசாரித்து வருவதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் தனிநாடு கோரி போராடிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதற்காக, 1980 களில் விசேட அதிரடிப்படை (STF) என்று அழைக்கப்படும் இலங்கை காவல்துறையின் ஒரு உயர் படைப் பிரிவுக்கு, பிரித்தானியாவின் தனியார் பாதுகாப்பு நிறுவனமான கீனி மீனி சேவை ( Private security company Keenie Meenie Services (KMS) பயிற்சி அளித்தது
இந்த விசேட அதிரடிப்படை STF பல மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகவும், விசாரணையின்றி மரணதண்டனைகளை வழங்கியதாகவும், தமிழ் பொதுமக்கள் கொல்லப்படுவது உள்ளிட்ட குற்றங்களும் இதில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போர்க்குற்றங்கள் அல்லது மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பிரித்தானியாவின் முக்கிய காவற்துறைப்பிரிவான பெருநகர காவற்துறையால் (Metropolitan Police) பிரித்தானிய கூலிப்படையினர் மீது விசாரணை நடத்தப்படுவது இதுவே முதல் முறை என நம்பப்படுகிறது.
பிரித்தானிய கூலிப்படையினரால் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதத்தில் Metropolitan Police ஒரு பரிந்துரையைப் பெற்றதாகவும், அது குறித்த கண்டறிதல் முயற்சிகளைத் ( “scoping exercise”), தொடர்ந்து, அது ஒரு விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் MET காவற்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்..
இலங்கையில் கீனி மீனி படையினரின் ஈடுபாட்டைப் பற்றிய பெரும்பாலான சான்றுகள், பிரித்தானியாவின் அரசாங்க ஆவணங்களில் இருந்தும், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊடகவியலாளர் பில் மில்லர் (Phil Miller) விடுத்த கோரிக்கையின் கீழ் பெற்றுக்கொண்ட தகவல்கள் மூலமும் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இது குறித்த பில் மில்லரின் (Phil Miller) நூலான “கீனி மீனி” (போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்த பிரிட்டிஷ் கூலிப்படையினர்) கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
இந்தப் போர் குற்ற விசாரணை பிரித்தானியாவின் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட வலுவான தமிழ் சமூகத்தினரால் நெருக்கமாகப் பின்தொடரப்பட்டு வருவதாகவும், அவர்களில் பலர் இலங்கையில் உள்நாட்டுப் போரின்போது பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றதாகவும் பில் மில்லர் (Phil Miller) தெரிவித்துள்ளார்.
இதேவேளை “1980 களிலேயே ஏராளமான தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர் என்றும், அக்காலக்கட்டத்தில் கீனி மீனி படையினர் (KMS) இலங்கையில் இருந்தனர் எனவும் பில் மில்லர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“உலங்குவானூர்திகளில் இருந்து துப்பாக்கியால் தாக்கப்பட்டதை மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள் (People remember being attacked by helicopter gunships.) இவ்வாறான பல சந்தர்ப்பங்களில் உலங்குவானூர்திகள் (Helicopter) பிரித்தானிய கூலிப்படையினரால் இயக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்து மக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்று நான் நினைக்கிறேன்.” என பில் மில்லர் (Phil Miller) குறிப்பிட்டுள்ளார்.
26 ஆண்டுகால இரத்தம் தோய்ந்த மோதலுக்குப் பின்னர், மே 2009 இல் இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலி களை தோற்கடித்தது. யுத்தம் இலங்கையை இன ரீதியாகப் பிரித்தது – ஒரு தனி அரசை விரும்பும் தமிழ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பெரும்பான்மை பௌத்த சிங்கள பேரினவாத (Buddhist) அரசாங்கம் நிறுவப்பட்டு இருந்தது. இந்தக் கொடிய யுத்தத்தில் 100,000 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களைக் காணவில்லை.